காசியின் அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒரு நாள் அங்கே சென்று தேவியைத் தரிசித்து விட்டு. ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ஒரு பக்கம் பெரிய குளம் மறுபக்கம் உயர்ந்த மதிற்சுவர் . அந்தப் பாதை வழியாக அவர் சென்று கொண்டிருந்த போது ஒரு குரங்குக் கூட்டம் அவரை எதிர்த்தது. சுவாமிஜியின் வேகம் தடைப்பட்டது அவர் முன்னேறத்தயங்கினார். அவர் பின்வாங்குவதைக் கண்டதும் குரங்குகள் அவரை நோக்கி முன்னேறின சுவாமி ஜி திரும்பி ஓடத்தொடங்கினார். குரங்குகள் விடாமல் துரத்தின. அவரது வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவையும் விரைந்து முன்னேறி அவர் மீது விழுந்து கடிக்கத் தொடங்கின. இனி சமாளிக்க முடியாது என்று தளரும் நிலைக்கு வந்து விட்டார். அப்போது வயதான துறவி ஒருவரின் குரல் கேட்டது. நில் எதிர்த்து நில். மிருகங்களை எதிர்கொள் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுவாமிஜியிடம் ஒரு புத்துணர்ச்சி பரவியது.
ஓடிக்கொண்டிருந்தவர் நின்றார் உறுதியாக நின்று குரங்குகளை வெறித்துப் பார்த்தார். அவ்வளவுதான் அவை பின் வாங்கத் தொடங்கின. சுவாமிஜி முன்னேறத் தொடங்கியதும் அவை திரும்பி ஓடலாயின. இந்த நிகழ்ச்சி சுவாமிஜியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. இயற்கை வேகங்களையும் பிரச்சனைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்து விடக் கூடாது என்பதை சுவாமிஜி இந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டார். அவரது பல சொற்பொழிவுகளில் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் கற்றுக்கொண்ட படிப்பினையின் தாக்கம் இருப்பதைக் காணலாம். எதிர்த்து நில் என்ற இந்த வார்த்தையை சுவாமிஜி எடுத்துக் கொண்ட விதத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம் ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் இத்தகைய ஒரு சம்பவம் நடந்தால் ஏன் நம் வாழ்வில் நடந்திருந்தால் நாம் எவ்வாறு செயல்படுவோம்,? அஞ்சி நடுங்கியிருப்போம், தலைதெறிக்க ஓடுவோம். சாதுவின் குரல் செவிகளில் கேட்டவுடன் குரங்குகளை எதிர்த்து நின்றால் அவை ஓடிவிடும் என்று எண்ணி எதிர்த்து நிற்போம். அது நம் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தியிருக்காது.
சுவாமிஜி இந்த சம்பவத்தில் இருந்து எடுத்துக் கொண்ட படிப்பினை முற்றிலும் வேறுபட்டிருந்ததால் இன்று 150 வருடங்களுக்குப் பின்னும் இதை நாம் சிந்திக்கிறோம். மிருகங்கள் என்று அந்த சாது கூறியதில் சுவாமிஜி குரங்கை மட்டும் காணவில்லை. அவர் அதில் இரண்டு விதமான மிருகங்களைக் கண்டார். அவை நம் அகத்தில் இருக்கும் மிருகத்தன்மை மற்றொன்று சமுதாயத்திலிருந்து நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள்.