காளிங்கனின் மீது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுதல்

காளிங்கனின் மீது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுதல்

யமுனை நதியின் அடியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் காளிங்கன் என்ற மிகப் பெரிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. அதன் விஷம் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூய்மை கெட்டு, நச்சுக் கலந்திருந்தது. அங்கு ஒரு பறவை பறந்தால் அது உடனே மடிந்து கீழே விழும். யமுனையில் இருந்து வெளிவந்த நச்சு வாயுவின் பாதிப்பால் யமுனைக் கரையிலிருந்த மரங்களும் புற்களும் பட்டுப் போய்விட்டது. அப்பெரிய பாம்பின் விஷத்தால் ஏற்பட்ட கேட்டைக் கிருஷ்ணர் கவனித்தார். விருந்தாவனத்தை அடுத்து ஓடிய நதி முழுவதும் உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடியதாக இருந்தது.

உலகில் கேடு விளைவிக்கும் சக்திகளைக் களைவதற்கென்றே அவதரித்துள்ள ஸ்ரீகிருஷ்ணர், யமுனை நதியின் கரையிலிருந்த ஒரு பெரிய கடம்ப மரத்தின் மீது ஏறினார். கடம்பம் எனும் வட்டமான மஞ்சள் நிற மலர், பொதுவாக விருந்தாவனப் பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு மலர் வகை. மரத்தின் உச்சியில் ஏறியபின் அவர் தன் அரைக் கச்சையை இறுக்கிக் கொண்டு, மல்யுத்தம் செய்பவனைப் போல் கைகளை ஆட்டிக் கொண்டு நச்சு மிகுந்த அந்த ஏரியினுள் குதித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏறிய அந்தக் கடம்ப மரம் ஒன்று மட்டுமே அப்பகுதியில் பட்டுப் போகாமல் தப்பியிருக்கிறது. இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள் அந்த கடம்ப மரம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருப்பதைக் காணலாம். ஸ்ரீகிருஷ்ணரின் கால் பட்டதும் மரம் உடனே உயிர் பெற்றதென்று சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். சில புராணங்களில், இம்மரத்தில் கிருஷ்ணர் வருங்காலத்தில் ஏறுவாரென்று அறிந்திருந்த கருடர், அது பட்டுப் போகாமல் இருக்க அதன் மீது அமிர்தத்தைத் தெளித்திருந்தார் என்று கூறுகின்றன.

கிருஷ்ணர் நதியில் குதித்தபோது நீர் கரை புரண்டு ஓடியது. அதனால் எழுந்த பேரொலி, கரு நாகமான காளிங்கனின் காதில் விழுந்தது. தன் இருப்பிடத்தை யாரோ தாக்க வந்திருக்கிறார் என்பதை அது புரிந்து கொண்டு, கிருஷ்ணரின் முன் வந்தது. அழகிய முகத்தில் புன்னகையுடன், அவர் மிகுந்த பலத்துடன் யமுனை நதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அதற்கு கோபம் வந்தது. தன் பலம் மிக்க உடம்பின் சுருள்களுக்கிடையே காளிங்கன், கிருஷ்ணரைப் பிடித்து அழுத்தியது. பாம்பின் பயங்கரமான பிடியில் தப்ப முடியாத வகையில் கிருஷ்ணர் அகப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டதும், அவரிடம் அன்பு கொண்டிருந்த ஆயர் குலச் சிறுவர்களும் மற்ற விருந்தாவன வாசிகளும் பயத்தால் அதிர்ந்து போனார்கள்.

அவர்களால் நதிக்கரையில் நின்று அழமுடிந்ததே தவிர, கிருஷ்ணருக்கு உதவும் வகையில் எதுவும் செய்ய முடியவில்லை. அன்னை யசோதை வந்தபோது, அவள் யமுனையில் குதிக்க விரும்பினாள். மற்றவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவள் மூர்ச்சையடைந்தாள். தம் உயிரைக் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்திருந்த நந்தகோபரும் மற்றவர்களும் நீரில் குதிக்க எண்ணினார்கள். ஆனால் பிரபு பலராமர் அவர்களைத் தடுத்தார். எவ்வித அபாயமும் இல்லையென்பது பலராமருக்குத் தெரியும்.

இரண்டு மணி நேரங்களுக்குக் கிருஷ்ணர் காளிங்கனின் பிடியில் ஒரு சாதாரணக் குழந்தையைப் போல் இருந்தார். ஆனால் தன் தாயும், தந்தையும் கோபியரும், சிறுவர்களும், பசுக்களும் கன்றுகளும் மற்ற கோகுல வாசிகளும் ~மரணத்தின்| தருவாயில் காப்பவரின்றி இருந்ததைக் கண்டதும் கிருஷ்ணர், தம்மை உடனே விடுவித்துக் கொண்டார். அவர் தம் உடலை விரிவடையச் செய்தார். பாம்பு அவரைக் கட்டிப் பிடிக்க சிரமப்பட்டது. அதனால் அதன் பிடி தளர்ந்து, கிருஷ்ணராகிய முழுமுதற் கடவுளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தது.

காளிங்கன் மிகுந்த கோபமடைந்து, தனது பெரிய படங்களை விரித்தது. மூக்குகளில் இருந்து நச்சுக் கலந்த மூச்சை வெளியிட்டது. அதன் கண்கள் நெருப்பாய் தகித்தது. வாயிலிருந்து அனல் வீசியது. கிருஷ்ணரைப் பார்த்தபடி அது சிறிது நேரம் அசையாமல் நின்றது. பிளவுபட்ட நாக்குகளால் உதடுகளை நக்கியபடி கண்களில் விஷம் பொங்க அவரைப் பார்த்தது. பாம்பின் மீது கருடன் பாய்வதுபோல, கிருஷ்ணர் அதன்மீது பாய்ந்தார். காளிங்கன் தன் விஷப் பற்களால் கிருஷ்ணரைக் கடிக்க முயன்றான். ஆனால் கிருஷ்ணர், அதன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். பாம்பின் தலையில் இருந்த ரத்தினங்களின் ஒளியினால் பிரபுவின் பாதங்கள் சிவந்து காணப்பட்டன. பின்பு, கலைஞர்களுக்கு எல்லாம் ஆதி கலைஞரான ஸ்ரீகிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வாணவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக வாசிகளான கந்தவர்கள், சித்தர்கள் மற்றும் தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடியபோது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்தபோது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு, தன்னில் இருந்த விஷத்தைக் கக்கியபோது அதன் பாவங்கள் குறையத் தொடங்கின. பன்பு அது, விஷத்துக்குப் பதிலாக இரத்தத்தை கக்கத் தொடங்கியது.

அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாகபத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை நோக்கி, உடனே அந்த இடத்தை விட்டு தாமதிக்காமல்; மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய்விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *