கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்

 கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்

விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு நந்தமகாராஜா கூறினார்: “இச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது. மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது”, என்று நந்தமகாராஜா கூறினார். இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திரனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. யாகத்தை நடத்த வேண்டாமென கிருஷ்ணர் விவாதித்தார். அதற்காக அவர் கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல், இகவுலக நலன்களுக்காக தேவர்களை வழிபடத் தேவையில்லை. தேவர்களை வழிபட்டுப் பெறப்படும் நன்மைகள் தற்காலிகமானவை. இரண்டாவதாக, தேவர்களை வழிபடுவதால் கிடைக்கும் தற்காலிகமான நன்மைகளும் முழுமுதற்கடவுளால் வழங்கப்படுபவை. அவரின் அனுமதியின்றி யாரும் யாருக்கும் எந்த நன்மையும் வழங்க இயலாது.

கிருஷ்ணர் மேலும் கூறினார்: “சுவர்க்க லோகத்தின் ஆளுனர் பதவியில் இருப்பதால் கர்வம் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இந்திரனுக்கு செய்யும் யாகத்தை நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும். நாம் விருந்தாவனத்தில் வாழ்வதில் திருப்தி காண்கிறோம். நமது உறவு குறிப்பாக கோவர்த்தன கிரியுடனும் விருந்தாவனத்துடனும் ஏற்பட்டது. நமது ஊரிலுள்ள பிராமணர்களையும் கோவர்த்தன கிரியையும் திருப்திப் படுத்துவதற்கான யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்”. எனப் பணிவாகக் கேட்டுக் கொண்டார். இறுதியில் நந்தமகாராஜா கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

அன்று முதல் இன்றுவரை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவர்த்தன பூசை நடத்தப்பட்டு வருகிறது. விருந்தாவனத்திலும், மற்ற இடங்களிலும், உலகெங்கிலும் உள்ள இஸ்கான் ஆலயங்களிலும் உணவு பெருமளவில் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது. நந்தமகாராஜாவும் ஏனைய ஆயர்களும் கோவர்த்தன பூசையை நிறைவேற்றி, மலையை வலம் வந்தார்கள். இந்த மரபையொட்டி இப்போதும் விருந்தாவனத்தில் இந்தப் பூஜை தினத்தன்று நன்றாக உடையுடுத்து, தம் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச் சென்று, பூஜையை நிறைவேற்றி மலையை வலம் வருகிறார்கள். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து வேதம் ஓதச் செய்து, கோவர்த்தன பூசையை நடத்திப் பிரசாதம் வழங்கினார்கள். விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள்.

கோவர்த்தன பூசையை நடத்தி வைத்த அந்தணர்கள், கோபாலர்களையும், கோபியரையும் ஆசிர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின், கிருஷ்ணர் மிகப் பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு, கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்றே, என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும்; கிருஷ்ணர் உண்டார். கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்ற கருத்து இன்றும் மதிக்கப் படுகிறது. அம்மலையின் கற்களை எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றைப் பூஜிக்கிறார்கள். உணவு முழுவதையும் உண்ட கிருஷ்ண வடிவமும், கிருஷ்ணர் தாமும் வெவ்வேறாக விழங்கி நின்றதால் கிருஷ்ணர் தாமும் மற்ற விருந்தாவனவாசிகளும் அந்த மாபெரும் மூர்த்திக்கும் கோவர்த்தன மலைக்கும் ஒருங்கே வழிபாடு நடத்தினார்கள். இவ்வாறு கோவர்த்தன பூசையை நடத்திய விருந்தாவன வாசிகள், வசுதேவர் மைந்தனான கிருஷ்ணரின் கட்டளைகளை நிறைவேற்றிய பின் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *